மதுரைக்கு அருகே உள்ள கிராமம் ஒன்றின் தலைவர் சமுத்திரக்கனி. சாதி பாகுபாடால் பக்கத்து ஊரில் மக்கள் அந்த ஊரில் உள்ள கோவிலுக்குள் செல்லக்கூடாது. ஜல்லிக்கட்டு போன்ற பொது நிகழ்ச்சிகளில் களமிறங்க கூடாது என்ற கட்டுப்பாடு விதிக்கட்டுள்ளது. அவர்களும் கோயிலுக்குள் வர வேண்டும், யார் வேண்டுமானாலும் ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்கலாம் என்று அந்த ஊர் மக்களு ஆதரவாக பேசுகிறார் சமுத்திரக்கனி.
அவரது முடிவுக்கு அதே ஊரில் இருக்கும் வேல ராமமூர்த்தி உள்ளிட்ட சிலர் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். பின்னர் ஜல்லிக்கட்டு போட்டியும் நடக்கிறது. அதில் பக்கத்து ஊர் மக்களும் கலந்து கெள்கின்றனர். அந்த போட்டியின் போது ஏற்படும் பிரச்சனையில், சமுத்திரக்கனி, வேல ராமமூர்த்தியின் தம்பி, மைம் கோபியின் அண்ணன் உயிரிழந்து விடுகின்றனர்.
இதையடுத்து அந்த ஊரில் இருக்க மனமில்லாமல் சமுத்திரக்கனியின் மனைவி, அவரது சிறுவயது மகன் சண்முகபாண்டியனை அழைத்துக் கொண்டு மலேசியாவுக்கு சென்றுவிடுகிறார். பின்னர் 20 வருடங்களுக்கு பிறகு சண்முகப்பாண்டியனுக்கு பெண் பார்ப்பதற்காக மீண்டும் அவர்கள் சொந்த ஊருக்கு வருகின்றனர். அங்கு ஜாதி பிரச்சனையால் நின்று போன ஜல்லிக்கட்டு போட்டியை மீண்டும் நடத்த வேண்டும், அப்பா சமுத்திரக்கனியை கொன்றவர்களை கண்டுபிடித்து பழிவாங்க வேண்டும் என்று முடிவு செய்கிறார் சண்முகபாண்டியன்.
கடைசியில் அந்த ஊரில் ஜல்லிக்கட்டு போட்டி மீண்டும் நடந்ததா? சமுத்திரக்கனியை கொன்றவர்களை சண்முகபாண்டியன் பழிவாங்கினாரா? என்பதே படத்தின் மீதிக்கதை.
ஹீரோயிசம் இல்லாமல் சண்முகபாண்டியன் யதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். மீனாக்ஷிக்கு சிறிய கதாபாத்திரம் என்றாலும், கொடுத்த கதாபாத்திரத்தில் ஸ்கோர் செய்திருக்கிறார். ஊர் தலைவராக சமுத்திரக்கனி சாதாரண மனிதராக வந்து கலக்கியிருக்கிறார். அவர் பேசும் வசனங்களும், அவரது நடிப்பும் படத்திற்கு வலு சேர்த்திருக்கிறது. மிடுக்கான தோற்றம், நடை என வேல ராமமூர்த்தி மிரட்டியிருக்கிறார். மைம் கோபி, மாரிமுத்து, பி.எல்.தேனப்பன் என மற்ற கதாபாத்திரங்கள் அனைவருமே படத்திற்கு வலு சேர்த்திருக்கின்றனர்.
முழுக்க முழுக்க ஜல்லிக்கட்டு மற்றும் அதனை மையப்படுத்திய கதை என்றாலும், ஜல்லிக்கட்டுக்கு எதற்காக தடை ஏற்பட்டது. அதன் பின்னணியில் என்ன நடந்தது என்பதை சிறப்பாக சொல்லியிருக்கிறார் பி.ஜி.முத்தையா. ஜல்லிக்கட்டு போட்டி நடத்த வெளிநாட்டு அமைப்புகளின் எதிர்ப்பை விட, நமது ஊர் கிராமங்களில் நடக்கும் சாதி பிரச்சனை தான் ஜல்லிக்கட்டு போட்டியை நடத்த விடாமல் முக்கிய பிரச்சனையாக இருக்கிறது என்பதை தெளிவாக காட்டியிருக்கிறார். எனினும் படத்தின் கதையின் பலம், திரைக்கதையில் விறுவிறுப்பு இல்லையோ என்ற எண்ணத்தை ஏற்படுத்தும்படி, படம் மெதுவாக நகர்கிறது. அதேபோல் மற்ற படங்களை போல இல்லாமல், இந்த படத்தில் நாயகன் ஒரு சாதாரண இளைஞனாக, ஜல்லிக்கட்டு போட்டிகளில் பங்கேற்று காளையை அடக்கும்படியான காட்சிகளை வைக்காமல் காட்டியிருப்பது பார்க்க புதுமையாக இருக்கிறது.
சந்தோஷ் தயாநிதி இசையில் பாடல்கள் கேட்கும் ரகம் தான். டி.உதயகுமாரின் ஒளிப்பதிவில் காட்சிகள் சிறப்பாக வந்திருக்கிறது.