நடிகர் அப்புக்குட்டி பேசுகையில்,“ நான் நடித்த படமொன்று மேடையிலேயே பிசினஸ் ஆகியிருக்கிறது. இதற்காக நான் சந்தோசப்படுகிறேன். இனி நான் ஒரு கோடி ரூபாய் சம்பளம் வாங்கிவிடுவேன்.நம்பிக்கையிருக்கிறது. பயப்படாதீர்கள். ஏன் நான் ஒரு கோடி ரூபாய் சம்பளம் வாங்கக்கூடாதா? நான் திரைத்துறைக்கு வந்து பத்து ஆண்டுகள் ஆகிவிட்டது. இந்த படத்தின் கதையை இயக்குநர் என்னிடம் சொல்லும் போது, என்னுடைய அம்மாவை நான் நேரில் பார்த்தது போலிருந்தது. எங்களிடம் விவசாய நிலம் கிடையாது. என்னுடைய பெற்றோர்கள் விவசாய கூலித் தொழிலாளர்கள் தான். நான் ஏன் சென்னைக்கு வந்தேன் என்றால் விவசாயம் செய்வதற்கு நிலமில்லை. நிலமிருந்தால் ஆடு மாடு மேய்த்துக் கொண்டிருப்பேன். எனக்குஒரு வேளை சோறு போடக்கூட அம்மாவால் முடியவில்லை.பிறகுநாம் ஏன் இவ்வளவு கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கிறோம் என்றுஎண்ணி, என்னுடைய தேவைகளுக்காக நான் சென்னைக்கு வந்தேன். அதைவிட உண்மையான விசயம் என்னவென்றால், விவசாயம் அழிந்துவிட்டது. விவசாயிகள் படும் கஷ்டத்தை இயக்குநர் விவரிக்கும் போது,இந்தப் படத்தின் கதையை விடக்கூடாது என்று எண்ணி, உடனடியாக ஒப்புக்கொண்டேன். என் கூடநடிப்பதற்கு நடிகைகள் தயங்குகிறார்கள். ஏன் தயங்க வேண்டும்? நான் நடிகனில்லையா? என்னையும் நடிகராக ஏற்றுக்கொள்ளக்கூடாதா..?அந்தவகையில் என்னுடன் நடித்த நடிகை வசுந்தராவை நான் மனதார பாராட்டுகிறேன். இனிமேல் என்னுடன் நடிப்பதற்கு நடிகைகள் முன் வருவார்கள் என்று நம்புகிறேன். ஒவ்வொரு காட்சியையும் சிறப்பாக இயக்கியிருக்கிறார். அழகர்சாமியின் குதிரை படம் எப்படி எனக்குப் பெயரும், புகழும் வாங்கிக் கொடுத்ததோ.. அதே போல் இந்த வாழ்க விவசாயி படமும் எனக்கு பெயரும், புகழும் வாங்கிக் கொடுக்கும் என்று உறுதியாக நம்புகிறேன்.” என்றார்.
நடிகை வசுந்தரா பேசுகையில்,“ இந்தப் படத்தின் இயக்குநர், நாயகன், தயாரிப்பாளர் ஆகியோர் விவசாயத்தைப் பின்னணியாகக் கொண்டவர்கள். அவர்கள் விவசாயத்தைப் பற்றியும், விவசாயிகளைப் பற்றியும் நேர்த்தியாகவும், யதார்த்தமாகவும், நேர்மையாகவும் ஒரு படைப்பை உருவாக்கியிருக்கிறார்கள். அந்தப் படைப்பிற்கு என்னால் முடிந்த வரை ஒத்துழைப்பு அளித்திருக்கிறேன். இந்தப் படத்தைப் பார்க்கும் ரசிகர்களுக்கு விவசாயிகளைப் பற்றியும், அவர்களின் தற்போதைய நிலையைப்பற்றியும் உணந்திடவேண்டும். அவர்களை உணர வைத்துவிடமுடியும் என்று நம்பி படக்குழுவினர் பணியாற்றியிருக்கிறார்கள். சிறிய பட்ஜெட் படங்களை ஊடகங்கள் தான் சிறந்த முறையில் ரசிகர்களிடம் கொண்டு சேர்க்கவேண்டும். அப்புக்குட்டிக்கு ஜோடியாக இதில் நடித்திருக்கிறேன் என்பதை விட ஒரு விவசாயிக்கு ஜோடியாக நடித்திருக்கிறேன். நகரத்து பெண்ணான என்னிடம் கிராமத்து பெண்ணாக எப்படி நடிக்கவேண்டும் என்பதை தெளிவாக எடுத்துரைத்து இயக்குநர் என்னிடமிருந்து நடிப்பை வாங்கியிருக்கிறார், அதற்காகஇயக்குநருக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்தப் படம் விருது பெறுவதைக் கடந்து அனைவருக்கும் பிடித்த கமர்சியல் அம்சம் ஒன்றும் இடம்பெற்றிருக்கிறது. ”என்றார்.