இசையமைப்பாளர் சித்ஸ்ரீராம் பேசும்போது
இசையமைப்பாளராக இப்படம் எனக்கு முதல் படம். இயக்குனர் மணிரத்னம் மற்றும் தனா இருவரும் என் மீது நம்பிக்கை வைத்து இந்த வாய்ப்பை எனக்கு கொடுத்திருக்கிறார்கள். 1960களில் எனது தாத்தா இசையமைப்பாளராக இருந்திருக்கிறார். இயக்குனர் இதனுடன் இணைந்து பணியாற்றுவதில் மகிழ்ச்சி. இப்படத்தில் இடம் பெற்ற நான்கு பாடல்களையும் சிவா எழுதியிருக்கிறார். இப்படத்தின் வாய்ப்பை எனது அதிர்ஷ்டமாக கருதுகிறேன் என்றார்.
நடிகர் விக்ரம் பிரபு பேசியதாவது,
மணிரத்னத்தின் தயாரிப்பில் நடித்ததில் மகிழ்ச்சி. தனா என்னிடம் கதை கூறினார், கதை வித்தியாசமான குடும்ப கதையாக இருந்ததால் சம்மதித்தேன். பிறகுதான் மெட்ராஸ் டாக்கீஸ் தயாரிக்கிறது என்று தெரியும். எந்த படமாக இருந்தாலும் என்னுடைய கதாபாத்திரம் எப்படி இருக்கிறது என்று தான் பார்ப்பேன். இயக்குநரின் வாழ்வில் நடந்த சம்பவங்களை மையப்படுத்தி இப்படம் உருவாகியிருக்கிறது.
எனது கதாபாத்திரம் தலைக்கனத்தோடு இருக்கிறானா? அல்லது தன்னம்பிக்கையோடு இருக்கிறானா? இறுதியில் அவன் எடுத்த முடிவில் வெற்றிபெறுகிறானா? என்பது படம் பார்க்கும்போது தெரியும். முடிவு அனைவருக்கும் திருப்தி கொடுக்கும் வகையில் அமைந்திருக்கும். ஒரு நடிகனாக அனைவரும் என்னை வித்தியாசமான கோணத்தில் பார்ப்பார்கள்.
கோயம்பேடு மார்க்கெட்டில் கூட்டத்தில் நேரடியாகத்தான் படப்பிடிப்பு நடத்தினோம்.
முதல் நாள் படப்பிடிப்பில் இயக்குநர் மணிரத்னம் வந்தார். அவரைப் பார்த்ததும் சிறிது பதட்டம் இருந்தது. பிறகு படம் முடிந்ததும் தான் அவரிடம் பேசினோம்.
ஒவ்வொருவரும் அவரவர் பாணியில் தங்களுடைய திறமையை நிரூபிக்கும் வகையில் நடித்தோம்.
ராதிகா எனக்கு மிகவும் பிடித்த நடிகை. அவரை அக்கா என்று தான் அழைப்பேன். அவர் நடிக்கும்போது இயல்பாக இருக்கும். எந்த கதாபாத்திரமாக இருந்தாலும் சுலபமாக நடித்துவிடுவார் என்றார்.
ராதிகா சரத்குமார் பேசும்போது,
சரத்குமார் தான் முதலில் கதை கேட்டார். பிறகு எனக்கும் பிடித்திருந்தது. இப்படத்தில் நடித்தது வித்தியாசமான அனுபவமாக இருந்தது. தனா இயக்கத்தில் மணிரத்னம் தயாரிப்பில் நடித்ததில் மகிழ்ச்சி.
நான் சித்ஸ்ரீராமின் ரசிகை. அவருடைய நிகழ்ச்சிக்குப் போக வேண்டும் என்று விரும்பினேன். ஆனால், நேரமின்மை காரணமாக போக இயலவில்லை. விக்ரம் பிரபு, ஐஸ்வர்யா ராஜேஷ், மடோனா செபாஸ்டியன், சோனு ஆகியோருடன் இணைந்து நடித்ததில் மகிழ்ச்சி என்றார்.
சரத்குமார் பேசும்போது,
தனா கதைகூறியதும் மக்களுடன் தொடர்பு ஏற்படுத்தும் இயல்பான கதையாக தோன்றியது. இப்படம் அன்றாட மக்களின் வாழ்வியலை யதார்த்தமாக கூறும் குடும்பத்துடன் பார்த்து மகிழும் படமாக இருக்கும். இதுபோன்ற கதையை யாராவது கூறமாட்டார்களா? என்று நான் நீண்ட நாட்களாக எதிர்பார்த்துக் கொண்டிருந்தேன். இயக்குநர் மணிரத்னம் தயாரிப்பில் நடிப்பது மகிழ்ச்சி என்றார்.
இயக்குநர் தனா பேசும்போது,
வாழ்க்கையில் இதுபோன்ற வாய்ப்பு ஒரு சிலருக்குத்தான் கிடைக்கும். இந்த வாய்ப்பால் ஆசிர்வதிக்கப்பட்டதாக உணர்கிறேன் என்றார்.
விழாவின் இறுதியில் ‘வானம் கொட்டட்டும்’ படத்தின் இசை தகடு வெளியிடப்பட்டது. படத்தை வெளியிடும் Ynot சசி மற்றும் பலர் கலந்துக் கொண்டார்கள்.