விஷமக்காரன் என டைட்டிலுக்கு ஏற்ப ஹீரோ வி, விஷமம் செய்ய அது வில்லங் கத்தில் முடிகிறது. மற்றொருவரின் மனதை தன்வயப்படுத்தி அவர்களை தன் எண்ணத்துக்கு ஏற்ப செயல்பட வைக்கும் மனோத்துவ ரீதியிலான மாறுபட்ட கதையாக வடிவமைத்திருக்கிறார் இயக்குனர். இதில் இயக்குனரும் ஹீரோவும் வி என்ற ஒருவர்தான்.படத்தின் தொடக்கத்திலேயே manipulate என்ற வார்த்தை அடிக்கடி உச்சரிக்கப்படுகிறது. ஒருவரிடம் அவர்களுக்கு சாதகமாகவே பேசி அவர்கள் மனதை தன் வயப்படுத்தி நம் எண்ணத்துக்கு ஏற்ப அவர்களை எப்படி செயல்பட வைக்கலாம் என்று சொல்லப் படுகிறது.
அதையே செயல் முறை விளக்கமாக முழுபடமாக உருவாக்கி இருக்கிறார் வி.அக்னியாக வி தன் கதாபாத்திரத்தை உணர்ந்து அறிமுகப் படத்திலேயே வாய் ஜாலத்தை கையாண்டு தமிழ், ஆங்கிலம் என்று கலந்து பேசி சந்தர்ப்பத்தை சாதகமாக மாற்றிக் கொள்ளும் யுக்தியை கையாண்டு முத்திரை பதித்துள்ளார். இவருக்கு உறுதுணையாக அனிகா விக்ரமன் சந்தேகபுத்தி கொண்ட மனைவி ஐகிரியாகவும், சைத்ரா ரெட்டி அழகு,அறிவு இருந்தும் தூண்டில் சிக்கிய மீனாக மாட்டிக் கொள்ளும் காதலி தரங்கிணியாகவும் படம் முழுவதும் வந்து தங்கள் பாத்திரங்களை உணர்ந்து சிறப்பாக செய்துள்ளனர். இந்த மூன்று பேரை சுற்றியே கதை நகர்வதால், மற்ற கதாபாத்திரங்களும் தேவைப்படாமல் போகிறது.
வெளிப்புறப் படப்பிடிப்பு குறைவு என்பதால், அலுவலகம், வீடு, கடற்கரை, சாலை என்று சிறிய வட்டத்திலேயே காட்சிக்கோணங்களை தகுந்தவாறு வைத்து ஒளிப்பதிவு செய்துள்ளார் ஜெ.கல்யாண்.கமர்ஷியல் கலப்படங்கள் எதையும் கையாளாமல் ஒரு கதையை படித்தது போன்ற உணர்வு ஏற்படுகிறது.க்ளைமேக்ஸ் காட்சிக்காக படம் முழுவதும் பார்த்தால் தான் படத்தின் ஒரு வரி புரியும், தெளிவாக சொல்லும் போது படத்தின் நோக்கம் தெரியும்.
