ஜாதி வேறுபாட்டில் மூழ்கி கிடக்கும் கிராமத்தில் வெவ்வேறு திசையில் இருந்து வரும் இரு சக்கர வாகனங்கள் மோதிக் கொள்ளாமல் திரும்ப தடுமாறி தெரு ஒரத்தில் கடை நடத்தும் வயதான சலவைத் தொழிலாளி மீது எதிர்பாராத விதமாக மோத அதனால் கை அடிபட்டு கிழே விழுகிறார்.மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் முதியவரை அந்த ஊர் அரசியல்வாதி இழப்பீடு வாங்கித் தருவதாக ஆசை வார்த்தை கூறுகிறார். ஏழ்மையில் இருக்கும் அந்த முதியவரும் அவரது மகனும் இதற்கு சம்மதிக்கின்றனர்.அரசியல்வாதியும், பக்கத்து கிராமத்தைச் சேர்ந்த செல்வாக்கு மிகுந்த பெரிய மனிதரும் சலவைத் தொழிலாளிக்கு இழப்பீடு தர சமரசம் பேசுகிறார்கள். ஆனால் சமரசம் இருவரின் சொந்த பகைமை காரணமாக சண்டையாக மாறி சலவைத் தொழிலாளி வழக்கு போட்டு இழப்பீடு வாங்கும் அளவிற்கு விட்டு விடுகிறது. நீதிமன்றத்தில் பல மாதங்களாக வழக்கு வாய்தா வாங்குவதிலேயே போய்விட, உதவி செய்யும் வக்கீலும் பணத்தை கேட்கிறார். முதலில் உதவி செய்ய வரும் அரசியல்வாதியும் இந்த முதியவருக்கு எதிராக திரும்பி பக்கத்து ஊர் பெரிய மனிதரிடம் சமரசம் செய்துக் கொள்வதால், தனியே அந்த முதியவர் வழக்கை எதிர்கொள்கிறார். இறுதியில் அந்த சலலைத் தொழிலாளிக்கு நீதி நியாயம் கிடைத்ததா?
படத்தின் நாயகனாக அறிமுகமாகியிருக்கிறார் புகழ். விசைத்தறித் தொழிலாளியாக வரும் அவரது இயல்பான நடிப்பு இரசிகர்களுக்கு அவரை மெருக்கமாக்கி விடுகிறது. குறிப்பாக ஆதிக்கசாதி இளைஞர்களுக்கு எதிராக ஆவேசம் கொள்ளுமிடத்தில் அவர் நடிப்பு நன்று. காதல் காட்சியிலும் முதல் படத்திலேயே சிறப்பாகச் செய்திருக்கும் அவர் பெயரைப் போலவே எதிர்காலத்தில் புகழ் பெறுவார் என்று நம்பலாம்.அவரது தந்தையாக, சலவைத் தொழிலாளி வேடத்தில் நடித்திருக்கும் மு.இராமசாமியின் நடிப்பு பற்றிச் சொல்லத் தேவையில்லை. அந்தப் பாத்திரமாகவே மாறியிருக்கும் அவர் படம் பார்ப்போர் மனதைக் கலங்கடித்து விடுகிறார். அந்தப் பரிதாபமான பார்வையும் நடிப்பும் அவர் எந்தப் பாத்திரத்துக்குள்ளும் தன்னைத் தகவமைத்துக் கொள்வார் என்று உணர வைக்கிறது.ஒரு சிறிய சம்பவத்தை கருவாக எடுத்துக் கொண்டு அதில் எவ்வளவு சாதி அரசியல் நடக்கிறது என்பதை அக்கு வேறு ஆணி வேறாக அலசியி ருக்கிறார் இயக்குனர் மகிவர்மன் சி.எஸ்.பெரியவர் ராமசாமிக்கு ஆதரவாக வாதாட முன்வரும் வக்கீல், “வரும் நஷ்ட ஈடு பணத்தில் தனக்கு எவ்வளவு பர்சன்டேஜ் மற்றவர்களுக்கு எவ்வளவு பர்சன்டேஜ் தரவேண்டும்” என்று கணக்கு சொல்வதும் அவரே நீதியை விலைபேசுவதும் கத்தரிக்கு தப்பி வந்த கடுமையான காட்சிகள்.ஒவ்வொரு முறையும் வாய்தா கொடுத்து இழுத்தடிக்கும்போது வழக்கு நடத்து வதின் கஷ்டத்தை உணர்த்துகிறது.
இறுதிதீர்ப்பு வரும்போது இருப்பதும் போச்சு என்ற நிலைக்கு ராமசாமி தள்ளப் படுவது மனதை பாரமாக்கு கிறது.வாய்தா சாமன்ய மனிதரின் வாழ்க்கையில் வழக்கை எதிர்கொள்ளும் வலியை நிறைவாக சொல்லும் படம்.
