8.8 C
New York
Thursday, March 28, 2024

Buy now

Manal Naharam Audio Launch News & Photos.

34 ஆண்டுகளுக்குப் பின் ‘ஒருதலை ராகம்’ படக்குழு சந்திப்பு!
-‘ ஒரு படவிழாவில் நெகிழ்ச்சிக் காட்சிகள்!

ஒரு படவிழாவில் ‘ஒருதலைராகம்’ படக்குழுவினர் சந்தித்துக் கொண்டனர் ஒருவருடன் ஒருவர் பேசி மகிழ்ந்து நெகிழ்ந்து மலரும் நினைவுகளில் மூழ்கினர். இந்த சுவாரஸ்ய சந்திப்பு நிகழ்வு பற்றிய விவரம் வருமாறு.

‘ஒருதலை ராகம்’ படம் மூலம் தமிழ்த்திரையுலகில் அறிமுகமான சங்கர், தமிழ், மலையாளம் என்று 120க்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருக்கிறார்.

‘ஒருதலை ராகம்’ சங்கர் என அறியப்பட்ட இவர் தமிழில் இயக்கியுள்ள படம் ‘மணல் நகரம்’ இவர் ஏற்கெனவே மலையாளத்தில் படம் இயக்கியுள்ளார்.

முழுக்க முழுக்க துயாயில் உருவாகியுள்ள இப்படத்தை டிஜெஎம் அசோசியேட்ஸ் சார்பில் எம்.ஐ.வசந்த்குமார் தயாரித்துள்ளார்.

கௌதம் கிருஷ்ணா, ப்ரஜின், தனிஷ்கா, வருணா ஷெட்டி, சங்கர் நடித்துள்ளனர். ரெனில் கௌதம் இசையமைத்துள்ளார்.ஒளிப்பதிவு ஜெ.ஸ்ரீதர். வசனம் ஆர்.வேலுமணி .

‘மணல்நகரம்’ படத்தின் ஆடியோ வெளியிட்டு விழா இன்று ஆர்.கே.வி ஸ்டுடியோவில் நடந்தது.
தான் இயக்கியிருந்ததால் ‘ஒருதலை ராகம்’ படக்குழுவினரை சந்திக்க ஏற்பாடு செய்து விழாவுக்கு வந்தவர்களுக்கு சர்ப்ரைஸ் கொடுக்க திட்டமிட்டு இருந்தார்’ஒருதலை ராகம்’சங்கர்.

அதன்படி இயக்குநர் டி.ராஜேந்தர், நாயகி ரூபா,நடிகர்கள் தியாகு,தும்பு கைலாஷ், ஒளிப்பதிவாளர் (ராபர்ட்) ராஜசேகரன் ,பி.ஆர்.ஓ.டைமண்ட் பாபு என ஒருதலைராகம் படக்குழுவினர் மேடையை அலங்கரித்தனர்.

‘மணல் நகரம்’ஆடியோவை டி.ராஜேந்தர் வெளியிட்டார் ரூபா பெற்றுக் கொண்டார்.

விழாவில் பேசிய பலரும் ‘ஒருதலை ராகம்’ படம் பற்றிய மலரும் நினைவுகளைப் பகிர்ந்து கொண்டனர்.

சங்கர் பேசும்போது ”நான்’ஒருதலை ராகம்’ படத்தில் அறிமுகமாகி 34 ஆண்டுகள் ஆகின்றன. இன்னமும் நான் ‘ஒருதலை ராகம்’சங்கர் தான். அந்தப்படத்தை என் வாழ்நாளில் மறக்க முடியாது. அது என்னைச் சினிமாவுக்கு நாயகனாக அறிமுகம் செய்த படம். அந்தப் பெயரை வைத்துக் கொண்டுதான் இத்தனை காலம் திரையுலகில் இருக்கிறேன். நான் அன்று படத்தில் ரூபாவிடம் பேசியிருந்தால் படமே இல்லை. இன்று ஹைதராபாத்தியிருந்து இதற்காக ரூபா வந்திருக்கிறார்.

‘மணல் நகரம்’ கதையை கேட்டவுடன் துபாயில் பல நாட்கள் எடுக்க வேண்டும் என்று பயந்து கைவிட்டு விடலாம் என்றேன். வேறு கதை செய்யலாம் என்ற போது தயாரிப்பாளர் எம்.ஐ.வசந்த்குமார் பிடிவாதமாக இருந்து ஊக்கம் கொடுத்தார். அதனால்தான் துபாயில் 62 நாட்கள் எடுக்க முடிந்தது.” என்றார்.

ஒளிப்பதிவாளரும் இயக்குநரும் நடிகருமான (ராபர்ட்) ராஜசேகர் பேசும்போது.. “உன்னை ராஜேந்திரன் என்று அழைக்கலாமா?” என்று டி.ராஜேந்தரிடம் கேட்டார். அவர் ஆமோதித்தார்.

” இன்று எங்களை இணைத்து வைத்த சங்கருக்கு நன்றி. ‘ஒருதலை ராகம்’ படம் ஒரு சரித்திரம் இதற்கு முன்னும் வர வில்லை.இதற்குப் பின்னும் இனி வர முடியாது. அதன் வித்து ராஜேந்தர் .விதைத்தது ராஜேந்தர். நான் சந்தித்த ஜினியஸ்களில் ராஜேந்தர் ஒருவர். ‘ஒருதலை ராகம்’ படத்தில் 70 பாடல்கள் போட்டுக் காட்டினார். படத்தில் 7 பாடல்கள் தான் வரும். படத்தில் ரூபா பேசவில்லை. கண்ணாலேயே நடித்து இருப்பார். தியாகு என் தம்பி போன்றவர். தும்பு கைலாஷ் கேரக்டரின் பாதிப்பு அவரது ஜோல்னாபை,கண்ணாடி பாதிப்பு அப்போது பலருக்கும் இருந்தது. இந்த ‘மணல் நகரம்’ பாடல் காட்சிகள் க்ளாஸாக இருக்கிறது. மாஸாக இருக்கிறது.சங்கருக்கு வாழ்த்துக்கள்!” என்றார்.

தியாகு வந்த போதே நெகிழ்ந்தார் ”எனக்கு அழுகையாக வருகிறது ”என்றவர் தொடர முடியாமல் திணறி நிறுத்தினார்.
”நண்பா ராஜா” என்று ராஜேந்தரை அழைத்துப் பார்த்தார். ”இங்கேபாரு உன்னைத்தான் ”என்றார் பெருமையுடன்.

தொடர்ந்து பேசியவர் ”இவன் ராஜா எங்கள் பக்கத்து வீட்டுக்காரன். ஒரே பள்ளியில் ஒன்றாகப் படித்தோம். பள்ளியில் நாலாம் வகுப்பு படித்த போதே போர்வையை கட்டி நாடகம் போட்டோம். ‘ஒருதலை ராகம்’படத்தை மறக்க முடியாது. அதை வைத்துதான் 34 ஆண்டுகளாக என் சினிமா வண்டி ஓடுகிறது.

அப்போது சினிமாவுக்கு வந்ததற்கு போகக் கூடாது என்று வீட்டில் மிரட்டினார்கள். துணிந்து சினிமாவுக்கு வந்தேன். சினிமா என்னைக் கைவிடவில்லை.” என்றார்..

தும்பு கைலாஷ் பேசும் போது.

“”ஒருதலை ராகம்’படத்தை வைத்து 90 படங்கள் நடித்துவிட்டேன். நான் இப்போது திருவனந்தபுரத்தில் இருக்கிறேன்.இன்று எங்களை ஒன்றாக இணைத்து வைத்த சங்கருக்கு நன்றி.இப்போது என்னால் பேசமுடியவில்லை. கொஞ்ச காலம் முன் எனக்கு முதல் ஹார்ட் அட்டாக் வந்தது பிழைத்து விட்டேன். இன்றைக்கு 2 வது ஹார்ட் அட்டாக் வந்தது போல இருக்கிறது. உறைந்து போய் நிற்கிறேன். பேசமுடியவில்லை. “என்றார்.

ரூபா பேசும் போது ”

”இப்போது என்ன பேசுவது என்றே புரியவில்லை. நெகிழ்ச்சியாக இருக்கிறது. நேற்று நடந்தது போல இருக்கிறது. ‘ஒருதலை ராகம்’ படத்தில் நடித்தது. காலேஜ் பிக்னிக் போல போய் வந்தோம். ஒவ்வொரு ஷாட் எடுக்கும் போதும் ராஜேந்தர் மியூசிக் போட்டுக் கொண்டே நடக்கவைப்பார். நடிக்கவைப்பார். படத்தில் அருமையான பாடல்கள்.ஆனால் ஒரு குறை எனக்குப்பாட ஒரு பாட்டு கூட இல்லை.’மணல் நகரம்’ மீண்டும் நம்மை இணைத்துள்ளது. இதன் வெற்றிவிழாவில் மீண்டும் சந்திப்போம். அதற்காகவாவது இந்தப்படம் ஓட வேண்டும்.”என்றார்.

ஜே எஸ் கே சதிஷ்குமார் பேசும்போது ” சமீபத்தில்20 வருஷத்துக்கு முந்தைய பள்ளி நண்பர்களை சந்தித்தபோதே சந்தோஷமாக இருந்தது.தாங்க முடியவில்லை.இது உண்மையிலேயே சந்தோஷமான நெகிழ்ச்சியான தருணம். “என்றார்.

டி.ராஜேந்தர் பேச ஆரம்பித்ததுமே அரங்கு கரவொலியால் அதிர்ந்தது. தன் ‘ஒருதலை ராகம்’ படக்குழுவினரை மகிழ்ச்சியுடன் வரவேற்றவர் பேச ஆரம்பித்தார்.

”நான் கடந்த 2 நாட்களாக நடந்த நிகழ்ச்சிகளில் பரபரப்பாக பேசினேன். புயல் வீசியது என்றார்கள். இங்கு. புயலாக வரவில்லை தென்றலாக வீசப் போகிறேன்.

நான் என்றும் பழையதை மறக்கமாட்டேன். நான் ‘ஒருதலை ராகம்’ எடுத்த மாயவரம் ஏவிசி கல்லூரியை பார்த்தாலே இன்றும் விழுந்து கும்பிடுவேன்.34 ஆண்டுகளாக இது வரை அங்குபோனது இல்லை. அங்கு இந்த ஆண்டு போகவுள்ளேன்.

இன்று எல்லாம் மாறி விட்டது.கேட்டால் ட்ரண்ட் என்கிறான்.
அன்று நாகரிகமாக காதல் இருந்தது இன்று மாறிவிட்டது. நூன் ஷோவில் பிக் அப் மேட்னியில் பேக் அப் என்று மாறிவிட்டது.
அன்று கதைக்காகப் படம் எடுத்தார்கள் இன்று சதைக்காகப் படம் எடுக்கிறார்கள். அன்று குத்து.ப்பாட்டு வைத்தார்கள்.இன்று வெத்துப்பாட்டு வைக்கிறார்கள்.

இன்று தமிழ்ச்சினிமாவில் அம்மா, ஆத்தா, தங்கை செண்டி மெண்ட்டை மதிப்பதில்லை .அப்படி வைத்தால் சீரியல் என்கிறான். ஆனால் ஆந்திரா, கேரளா, கர்நாடகாவில் .இன்றும் அம்மா, ஆத்தா, தங்கை செண்டி மெண்ட்டை மதிக்கிறான்.

இன்று புரிகிற மாதிரி பாட்டு இருக்கக் கூடாது. கேட்டால் ட்ரண்ட் என்கிறான்.

நான் 108 குரலில் பேசுவேன் இன்றுவரை ஃபீல்டில் இருக்கிறேன். என்னையே கிண்டல் செய்கிறான்.

பலபேர் உன்னைக் கிண்டல் செய்தால் கவலைப் படாதே. உன்னிடம் திறமை இருந்தால் கிண்டல் செய்வான். உன் மேல் பொறாமை இருந்தால் கிண்டல் செய்வான்.உன்னை யாரும் சட்டை செய்யவில்லை என்றால் நீ சடை என்று அர்த்தம். யாரும் உன்னைக் கிண்டல் செய்தால் .கவலைப் படாதே.

அன்று’ராகம் தேடும் பல்லவி’யில் சங்கரை நான் ஒரு இயக்குநராக காண்பித்தேன். இன்று அது பலித்து விட்டது

எனக்கு மலையாளத்தில் படமெடுக்க ஆசை. அங்குதான் கலாச்சாரம் இருக்கிறது. அங்குதான் குடும்பக்கதை ‘திரிஷ்யம்’ ஓடுகிறது. மலையாளத்தில்தான் மம்முட்டி, மோகன்லால், திலீப் என எல்லாரும் வேட்டி கட்டி நடிக்கிறார்கள். இங்கு வேட்டி கட்டி நடிக்கிறார்களா? எல்லாரும் ஜீன்ஸ் போட்டு நடிக்கிறார்கள்” என்றவர். படக்குழுவினரை வாழ்த்தினார்.படக்குழுவினருக்கு நினைவுப் பரிசையும் வழங்கினார்.

அவர் பேசப் பேச பேச்சின் இடையிடையே ஆங்காங்கே பாடியும், குரல் மாற்றிப் பேசியும் அரங்கை அதிரவைத்தார். மொத்தத்தில் இசை வெளியீட்டுவிழா பார்வையாளர் களுக்கு மறக்க மடியாத அனுபவமாக அமைந்தது.

no images were found

Related Articles

Stay Connected

22,043FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles

CLOSE
CLOSE