இந்த படத்தில் நாயகனாக தினேஷ் நாயகியாக அதிதி மேனன் இவரின் அம்மாவாக தேவயாணி அப்பாவாக ஆனந்த் ராஜ் தினேஷ் அம்மாவாக ரேணுகா, வில்லனாக முனிஷ்காந்த், மனோபாலா, மாகநதி சங்கர், மொட்டை ராஜேந்திரன், சாம்ஸ், மற்றும் பலர் நடிப்பில் சரவண்ணன் அபிமன்யு ஒளிப்பதிவில் ரகுநந்தன் இசையில் அறிமுக இயக்குனர் காந்தி மணிவாசகம் இயக்கத்தில் வெளிவந்து இருக்கும் நகைசுவை படம் தான் களவாணி மாப்பிள்ளை
மிகவும் செல்வந்தர் தேவயானி. இவருக்கு பொய் சொன்னால் பிடிக்காது. இவரது அப்பா உடல்நிலை சரியில்லாமல் இருக்கும் போது கணவர் ஆனந்த் ராஜ்க்கு கார் ஓட்ட தெரியாத காரணத்தால் அப்பா இறந்து போகிறார். கார் ஓட்ட தெரியாது என்று தன்னிடம் மறைத்ததால் ஆனந்த் ராஜை ஒதுக்கி வைக்கிறார்.
தேவயானியின் ஒரே மகள் நாயகி அதிதி மேனன். இவர் கால்நடை உதவி மருத்துவராக இருக்கிறார். இவருக்கும் நாயகன் தினேஷுக்கும் ஒரு விபத்தில் பழக்கம் ஏற்படுகிறது. இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறுகிறது. தினேஷுக்கு 18 வருடங்களுக்கு எந்த வண்டியும் ஓட்டக்கூடாது என்று ஜோதிடர் ஒருவர் சொல்ல, எந்த வண்டியும் ஓட்ட பழகாமல் வளர்ந்திருக்கிறார்.
தினேஷ், அதிதிமேனனின் காதல் விஷயம் தேவயானிக்கு தெரிந்து திருமண ஏற்பாடுகள் செய்கிறார்கள். கார் ஓட்ட தெரியாத காரணத்தால் கணவரை ஒதுக்கி வைத்திருக்கும் தேவயானிக்கு, தினேஷின் விஷயம் தெரிந்ததா? நாயகி அதிதி மேனனை தினேஷ் கரம் பிடித்தாரா? என்பதே படத்தின் மீதிக்கதை.
வித்தியாசமான கதைகளை தேர்வு செய்து நடித்து வரும் தினேஷ் இப்படத்தின் நாயகனாக நடித்திருக்கிறார். காமெடியில் ஓரளவிற்கு நடிப்பு திறனை வெளிப்படுத்தி இருக்கிறார். குறிப்பாக இப்படத்தில் நடனம் சிறப்பாக ஆடியிருக்கிறார். நாயகியாக நடித்திருக்கும் அதிதி மேனன் அழகாக இருக்கிறார். கதாபாத்திரத்தை உணர்ந்து சிறப்பாக நடித்திருக்கிறார்.
மாமியாராக நடித்திருக்கும் தேவயானி, தனக்கே உரிய பாணியில் நடித்து அசத்தி இருக்கிறார். இவருக்கு கணவராக நடித்திருக்கும் ஆனந்த் ராஜுக்கும் இடையேயான காட்சிகள் ரசிக்கும்படி உள்ளது.
முனிஸ்காந்த், மொட்டை ராஜேந்திரன் ஆகியோர் கொடுத்த வேலையை சிறப்பாக செய்திருக்கிறார். பல இடங்களில் காமெடியில் கலக்கி இருக்கிறார்கள்.
காமெடியை மையமாக வைத்து படம் இயக்கி இருக்கிறார் இயக்குனர் காந்தி மணிவாசகம். ஆனால் ஓரளவிற்கே காமெடி கைகொடுத்திருக்கிறது. சுவாரஸ்யமான காட்சிகள், வித்தியாசமான காட்சிகள் வைத்திருந்தால் கூடுதலாக ரசித்திருக்கலாம். கதாபாத்திரங்களிடையே திறமையாக வேலை வாங்கி இருக்கிறார்.
ரகுநந்தன் இசையில் முதல் பாடல் தாளம் போட வைக்கிறது. மற்ற பாடல்கள் அனைத்தும் கேட்கும் ரகம். சரவணன் அபிமன்யு ஒளிப்பதிவில் காட்சிகள் அனைத்தும் ரசிக்க வைக்கிறது.