கௌசிக்ராம் சினிமாவை நேசிப்பவன் அதே போல் தன் வாழ்க்கையிலும் சினிமாவில் வருவது போல் காதலிக்க வேண்டும் என்று மழையில் காதலை சொல்வது, கேன்டல் லைட் டின்னர், சினிமாவில் பார்ப்பது போன்று காதல் செய்ய வேண்டும் என்று பட்டியலை தயாரித்து வைத்து தனக்கு பிடித்த பெண்களை காதலிக்க தொடங்குகிறான். எந்த காதலும் கைகூடாமல் போக இறுதியில் ஹிரோஷினி என்ற பெண்ணிடம் தன் காதலை சொல்லி செல்போன் நம்பரையும் வாங்கி வருகிறான்.மறுநாள் தந்தையின் நண்பர் குடும்பத்துடன் வீட்டிற்கு வர, அவரின் மகள் தொழிலதிபரான அஞ்சலி கௌசிக்கை பார்த்தவுடன் பிடித்து போக திருமணம் செய்து கொள்ள சொல்கிறாள்.முதலில் அதிர்ச்சியாகும் கௌசிக் பின்னர் சம்மதம் n;தரிவிக்க திருமணம் இனிதே நடக்கிறது.அழகான பெண்ணே மனைவியாக கிடைத்த சந்தோஷத்தில் கௌசிக் சினிமாவில் வருவது போன்று காதலை சினிமாத்தனமாக அணுகுகிறான். முதலில் இதற்கு இணங்கும் அஞ்சலி, ஒரு நாள் அவனின் டைரியை படிக்கும் போதும் தான் எல்லோரிடமும் இதே ஃபார்மூலாவை கடைப்பிடித்து வருகிறான் என்பதை உணர்ந்து கௌசிக்கின் சினிமா காதலை மாற்ற நினைக்கிறாள். அதை புரிய வைக்க முயலும்போது அஞ்சலிக்கும் கௌசிக்கிற்கும் சண்டை ஏற்பட்டு மனக்கசப்பில் விவாகரத்து வரை செல்கிறது. இதற்கிடையே காதலி ஹிரோஷினியை கௌசிக் சந்திக்க நேரிடுகிறது. காதலி ஹிரோஷினியும் காதலிக்க வற்புறுத்த மனவருத்தத்தில் இருக்கும் கௌசிக் இதற்கு சம்மதம் சொன்னரா? அஞ்சலியும், கௌசிக்கும் மீண்டும் இணைந்தார்களா? கௌசிக் யதார்த்த காதலை உணர்ந்தாரா? என்பதே மீதிக்கதை.புதுமுக ஹீரோ கவுசிக் துள்ளலான நடிப்வை வெளியிட்டிருக்கிறார். ஹீரோஷினி தங்கியிருக்கும் வீட்டுக்கு வெளியே கொட்டும் மழையில் நனைந்தபடி பப்பாளி பாடல் பாடப் போவதாக கூறி அவரை காதலில் விழ வைப்பதும் பின்னர் தன் வீட்டுக்கு வரும் அஞ்சலியின் அழகில் மயங்கு வதும் இளமை குறும்பு.கவுசிக்கின் அப்பாவித்தனமான பேச்சை கண்டு மயங்கும் அஞ்சலி அவரிடம் ” நாம ரெண்டுபேரும் கல்யாணம் பண்ணிக்கலாமா?” என்று கேட்பது திடீர் ஷாக். உடனடியாக குடும்பத்தாரும் இருவருக்கும் திருமணம் செய்து வைப்பது கதையை வேகமாக நகர்த்துகிறது.அஞ்சலி இயல்பான வாழ்கையை விரும்பினாலும் கவுசிக் அவரிடம் சினிமாத்தமான ரொமான்ஸ் செய்யலாம் என்று கேட்பதும் ஒரு கட்டத்தில் அதுவே அவர்களுக்குள் பிளவை ஏற்படுத்துவதும் நிஜத்தின் பிரதிபலிப்பு.கிளைமாக்ஸில் வில்லனிடம் சிக்கிக் கொள்ளும் கவுசிக் உயிர்போகும் பயத்தில் துப்பாக்கி முனையில் தன் மனைவியிடம் கண்ணீர் விட்டு கதறி பேசுவது நெகிழ்ச்சி.காதலை கொண்டாடும் கணவன், அதை சரி செய்ய நினைக்கும் மனைவி, மகனின் வாழ்க்கை சிதறாமல் இருக்க போராடும் பெற்றோர், இடையே நட்பு, காதல், பகை, சண்டை என்று வித்தியாசமான கோணத்தில் திரைக்கதையமைத்து அசத்தியிருக்கிறார் இயக்குனர் ராகவ் மிர்தத். கொஞ்சம் தேவையில்லாத காட்சிகள் இருந்தாலும் தன்னுடைய நேர்த்தியான இயக்கத்தால் சரி செய்து அனைவரையும் கவர்ந்துள்ளார் இயக்குனர் ராகவ் மிர்தத்.
