இயக்குனர் வெற்றி செல்வன் தன் பங்கை மிகவும் உணர்ந்து தமிழ் ரசிகர்களின் எண்ணத்தை புரிந்து அதே போல பிராசாந்த்க்கு என்ன தேவையோ அதை புரிந்து ரசிக்க வைத்துள்ளார்.
இந்த படத்தில் பிரசாந்த்,சஞ்சிதா ஷெட்டி, பிரபு, ஆனந்த்ராஜ், அசுதோஷ் ராணா, ஆத்மா பேட்ரிக்,சாயாஜி சிண்டே மற்றும் பலர் நடிப்பில் பன்னீர்செல்வம் ஒளிப்பதிவில் ஜெய் கணேஷ் இசையில் வெற்றி செல்வன் இயக்கத்தில் வெளிவந்து இருக்கும் படம் தான் ஜானி
பிரசாந்த், பிரபு, ஆனந்த்ராஜ், அசுதோஷ் ராணா, ஆத்மா பேட்ரிக் உள்ளிட்ட 5 பேரும் ஒரு குழுவாக செயல்படுகிறார்கள். இவர்கள் ஒவ்வொருத்தரும் சட்டவிரோத தொழில்களில் ஈடுபட்டு குறுக்கு வழியில் சம்பாதித்து ஒரு சூதாட்ட கிளப்பை நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில், கொச்சி போலீசிடம் சிக்கிய கடத்தல் பொருள் பாதி விலைக்கு வந்திருப்பதாக பிரபுவுக்கு தகவல் கிடைக்கிறது. ஐந்து பேரும் சேர்ந்து பணம் போட்டு அந்த பொருளை வாங்க திட்டமிட்டு ஆத்மா பேட்ரிக்கிடம் பணத்தை கொடுத்து அனுப்புகின்றனர்.
பணத்தை எடுத்துச் செல்லும் ஆத்மாவிடம் இருந்து பிரசாந்த் பணத்தை திருடிவிடுகிறார். இதற்கிடையே பிரசாந்த்தின் காதலியான சஞ்சிதா ஷெட்டியை அசுதோஷ் ராணா தன்னுடைய கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறார். தனது அப்பா, வாங்கிய கடனை திருப்பி செலுத்தாததால் தன்னை அசுதோஷ் ராணா கட்டுப்பாட்டில் வைத்திருப்பதாகவும், அவரிடம் இருந்து தன்னை காப்பாற்றும்படியும் சஞ்சிதா, பிரசாந்த்திடம் கேட்கிறார்.
கடைசியில், பிரசாந்த் தனது கூட்டாளிகளிடம் சிக்கினாரா? சஞ்சிதா ஷெட்டியை காப்பாற்றினாரா? அந்த பணம் என்னவானது? அதன் பின்னணியில் என்ன நடந்தது? என்பதே படத்தின் மீதிக்கதை.
நாயகன் பிரசாந்த் நீண்ட இடைவேளைக்கு பிறகு தனது பார்முக்கு வந்திருக்கிறார். காதல், ஆக்ஷன் என படத்தில் வித்தியாசமான பிரசாந்த்தை பார்க்க முடிகிறது. சஞ்சிதா ஷெட்டி அவருக்கு கொடுத்த கதாபாத்திரத்தை மெருகேற்றியிருக்கிறார். திருப்பங்களுடன் வரும் பிரபுவின் கதாபாத்திரம், காமெடி கலந்த வில்லத்தமான ஆனந்த்ராஜ் கதாபாத்திரம் மற்றும் அசுதோஷ் ராணா, ஆத்மா பேட்ரிக் வில்லத்தமான கதாபாத்திரங்களும் சிறப்பாக வந்துள்ளது. ஷாயாஜி ஷிண்டே போலீஸ் அதிகாரியாக சிறப்பாக நடித்திருக்கிறார்.
2007-ம் ஆண்டு இந்தியில் வெளியான திரைப்படம் ‘ஜானி கட்டார்’ படத்தை மையப்படுத்தி இந்த படத்தை உருவாக்கி இருக்கிறார் பி.வெற்றிசெல்வன். ஆக்ஷன், அதிரடி, காமெடி, காதல் என கதைக்கு ஏற்ப படத்தின் திரைக்கதை விறுவிறுப்பாக நகர்கிறது. எனினும் படத்தின் தேவையில்லாத சில காட்சிகளை மட்டும் தவிர்த்திருந்தால் இன்னமும் சிறப்பாக இருந்திருக்கும்.
ஜெய்கணேஷின் பின்னணி இசை படத்திற்கு பலம். எம்.வி. பன்னீர் செல்வம் ஒளிப்பதிவில் காட்சிகள் சிறப்பாக வந்துள்ளன. Rank 3.5/5