15.4 C
New York
Tuesday, May 6, 2025

Buy now

spot_img

“Cobra” Trailer Launched

‘கோப்ரா’ படத்தின் முன்னோட்டம் வெளியீடு

ரசிகர்களின் அன்பை அளவிட முடியாது - சீயான் விக்ரம் உருக்கம்

கனவு பலித்தது- ஸ்ரீநிதி ஷெட்டி

விக்ரம் சார் படம் பார்த்து வளர்ந்தவள் நான் - மீனாட்சி கோவிந்தராஜன்

‘கோப்ரா’ மிகச்சிறந்த அனுபவம் - மிருணாளினி ரவி

இந்திய திரையுலகில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் சீயான் விக்ரம் நடிக்கும் ‘கோப்ரா’ படத்தின் முன்னோட்டம் வெளியிடப்பட்டது.

இயக்குநர் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் தயாராகி, ஆகஸ்ட் 31 ஆம் தேதியன்று வெளியாகவிருக்கும் திரைப்படம் சீயான் விக்ரமின் ‘கோப்ரா’. இந்த படத்தில் சீயான் விக்ரமுக்கு ஜோடியாக ‘கே ஜி எஃப்’ படப்புகழ் நடிகை ஸ்ரீநிதி ஷெட்டி நடிக்கிறார். இவர்களுடன் ஏராளமான முன்னணி நட்சத்திர பட்டாளங்களும் நடித்திருக்கிறார்கள். ‘இசைப்புயல்’ ஏ ஆ ரஹ்மான் இசையமைத்திருக்கும் இந்த படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோ பட நிறுவனத்தின் சார்பில் பிரபல தயாரிப்பாளர் எஸ். எஸ். லலித்குமார் தயாரித்திருக்கிறார். இந்த படத்தை தமிழகம் முழுவதும் உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் வெளியிடுகிறது. ‘கோப்ரா’ படத்தின் பாடல்கள் வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்றிருக்கும் நிலையில் படத்தின் முன்னோட்டம் வெளியாகியிருக்கிறது.

இதற்காக சென்னை வி. ஆர். வணிக வளாகத்திலுள்ள பி விஆர் திரையரங்கத்தில் ‘கோப்ரா’ முன்னோட்ட வெளியீட்டு விழா நடைபெற்றது- இதில் படத்தின் நாயகன் சீயான் விக்ரம், நாயகி ஸ்ரீநிதி ஷெட்டி, படத்தில் முக்கிய வேடத்தில் நடித்திருக்கும் நடிகைகளான மீனாட்சி கோவிந்தராஜன் மற்றும் மிருணாளினி ரவி, நடிகர் துருவ் விக்ரம், குழந்தை நட்சத்திரம் ரனீஷ் ஆகியோர் கலந்து கொண்டனர்.

நடிகை மீனாட்சி கோவிந்தராஜன் பேசுகையில், '' கோப்ரா படம் எனக்கு ஸ்பெஷலானது. நான் விக்ரம் சார் படத்தை பார்த்து வளர்ந்தவள். அவருடன் இணைந்து நடிக்கும் வாய்ப்பு இல்லை என்றாலும், அவர் நடிக்கும் படத்தில் சிறிய வேடத்தில் நடித்திருக்கிறேன் என்பதே மகிழ்ச்சியாக இருக்கிறது. படத்தினை விளம்பரப்படுத்தும் நிகழ்வுகளில் அவருடன் இணைந்து பயணிப்பது சிறப்பான அனுபவமாக இருக்கிறது. கோப்ரா படம் வெளியாகும் முதல் நாள் முதல் காட்சி பார்க்க வேண்டும் என்ற ஆவல் மற்றவர்களைப் போல் எனக்கும் இருக்கிறது. ஆகஸ்ட் 31-ஆம் தேதி அன்று திரையரங்கில் சந்திக்கலாம்'' என்றார்.

நடிகை மிருணாளினி ரவி பேசுகையில், '' 2019 ஆம் ஆண்டில் சின்ன சின்ன வீடியோக்கள் மூலம் கவனத்தை கவர்ந்து வந்த என்னை, இயக்குநர் அஜய் சார் தொடர்பு கொண்டு, ‘கோப்ரா’ படத்தில் நடிக்கும் வாய்ப்பை வழங்கினார். சீயான் விக்ரம் சாருடன் நடிக்க வேண்டும் என்பது என்னுடைய கனவாக இருந்தது. அந்த கனவையும் இயக்குநர் அஜய் நனவாக்கினார். அவர் நடித்த ‘சாமி’, ‘அந்நியன்’ ஆகிய படங்களை பார்த்து, தீவிர ரசிகையாக இருந்த எனக்கு, அவருடன் இணைந்து நடிக்கும்போது … இப்போது வரை அது கனவாகவே இருக்கிறது. ஆகஸ்ட் 31ஆம் தேதி அன்று ‘கோப்ரா’ படத்தை ரசிகையாக பார்க்க ஆவலாக இருக்கிறேன்.” என்றார்.

நடிகர் துருவ் விக்ரம் பேசுகையில், '' இந்த நிகழ்வில் கலந்து கொண்டதை எனக்கு அளிக்கப்பட்ட கௌரவமாகவும், பெருமிதமாகவும் கருதுகிறேன். நடிகனாக இல்லாதிருந்தாலும், ரசிகனாக இந்நிகழ்வில் கலந்து கொண்டிருப்பேன். மூன்று ஆண்டுகளுக்கு முன் ‘கோப்ரா’ படத்தின் பணிகள் தொடங்கும் போது அப்பாவிடம், ‘கோப்ரா’ என்ன ஸ்பெஷல்? என கேட்டேன். “அஜய், அஜயின் விஷன். கிரியேட்டிவிட்டி.. திரையில் சொல்லும் உத்தி. இந்த காலகட்டத்தில் திரையரங்கத்தில் ஒரு திரைப்படம் அதிக நாட்கள் ஓடுவது என்பது அரிதாகிவிட்டது. இந்தப் படம் அதனை மாற்றும்.” என பதிலளித்தார். எனக்கும் ‘கோப்ரா’ படத்திற்கு ரசிகர்களின் ஆதரவு கிடைக்கும் என நினைக்கிறேன்.ஏனெனில் இந்தப் படத்தின் அஜய் மற்றும் அப்பா ஆகிய இருவரும் தங்களுடைய கடின உழைப்பை வழங்கி இருக்கிறார்கள். இயக்குநர் அஜயின் கற்பனையை திரையில் சாத்தியப்படுத்த வேண்டும் என்பதற்காக அப்பா கடினமாக உழைத்திருக்கிறார்.

கே ஜி எஃப் படத்தில் நடித்ததற்காக ஸ்ரீநிதிக்கு வாழ்த்துக்கள் தெரிவிக்கிறேன். உங்களுக்கு தமிழகத்திலும் ஏராளமான ரசிகர்கள் இருக்கிறார்கள். அதனால் ‘கோப்ரா’வில் நடித்திருக்கும் உங்களுக்கும் இங்கு பெரும் வரவேற்பு கிடைக்கும். மீனாட்சி கோவிந்தராஜன் மற்றும் மிருணாளினி ரவி ஆகிய இருவரும் இந்த படத்தில் தங்களுடைய பங்களிப்பை சிறப்பாக செய்திருப்பார்கள் என நம்புகிறேன்.

என்னுடைய அப்பா கடின உழைப்பாளி என்று அனைவருக்கும் தெரியும். அவருடன் ‘மகான்’ படத்தில் பணியாற்றும்போது ஒரு விசயத்தை உன்னிப்பாக கவனித்தேன். நீளமான காட்சி ஒன்றில் மும்முரமாக நடித்துக் கொண்டிருந்தோம். ஒரு புள்ளியில் எனக்கு சோர்வு ஏற்பட்டது. ஆனால் அப்பா சோர்வே இல்லாமல், உற்சாகத்துடன் படப்பிடிப்பு தளத்தில் பணியாற்றிக் கொண்டிருந்தார். அப்போது அவரிடம், “என்னப்பா.. எனக்கு எனர்ஜி போய்விட்டது. சோர்வாக இருக்கிறேன். ஆனால் நீங்கள் உற்சாகத்துடன் வளைய வருகிறீர்களே எப்படி?” எனக் கேட்டேன். அதற்கு அவர், '' இந்த தொழிலில் ஒரு இடத்தை பெறுவதற்காக கடுமையான போராட்டத்தை சந்தித்திருப்பதால்.. இந்த உற்சாகம் தொடர்கிறது என நினைக்கிறேன்” என பதிலளித்தார். அவர் பேசி முடித்ததும், அவரைப் பற்றிய ஒரு திறனாய்வு எனக்குள் ஏற்பட்டது. அவர் ஒரு சிறப்பு மிக்க மனிதர். இதன் காரணமாகவே அவர் நடித்திருக்கும் 'கோப்ரா' மிகப்பெரிய வெற்றியைப் பெறும்.'' என்றார்.

நடிகை ஸ்ரீநிதி ஷெட்டி பேசுகையில், '' சீயான் விக்ரம் சாருடன் இணைந்து பணியாற்ற வேண்டும் என்பது என்னுடைய கனவுகளில் ஒன்று. அது இந்த ‘கோப்ரா’ படத்தின் மூலம் நிறைவேறி இருக்கிறது. இதற்காக இயக்குநர் அஜய் ஞானமுத்து, தயாரிப்பாளர் லலித் குமார் ஆகியோருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். படப்பிடிப்பு தளத்தில் என்னை இயல்பாக இருக்க வைத்து, படப்பிடிப்பு முழுவதையும் உற்சாகமாக பணியாற்ற வைத்ததில் விக்ரம் சாரின் ஒத்துழைப்பு மறக்க இயலாது. தமிழில் முதன் முதலாக அறிமுகமாகும் இந்த படத்தில் உடன் பணியாற்றிய தொழில்நுட்பக் கலைஞர்களுக்கும், நடிகர் நடிகைகளுக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். ஆகஸ்ட் 31ம் தேதி வெளியாகும் கோப்ரா திரைப்படத்தை திரையரங்குகளுக்கு சென்று பார்த்து ஆதரவளிக்க வேண்டும்.': என்றார்.

சீயான் விக்ரம் பேசுகையில், '' இயக்குநர் அஜய் ஞானமுத்து, ‘டிமான்டி காலனி’, ‘இமைக்கா நொடிகள்’ என ஒவ்வொரு படமும் வித்தியாசமான ஜானரில் இயக்கியிருந்தார். ‘கோப்ரா’ படத்தையும் அவர் வழக்கமானதைக் காட்டிலும் புதிதாக இயக்கியிருக்கிறார். அவரால் இன்று இந்த நிகழ்விற்கு வர இயலவில்லை. படத்தின் இறுதி கட்டப் பணிகளில் கவனம் செலுத்தி வருகிறார். இந்தப்படம் அவருடைய கற்பனை படைப்பு. நாங்கள் எல்லாம் அதற்கு ஒத்துழைப்பை வழங்கி இருக்கிறோம்.

என்னுடைய நடிப்பில் தயாரான திரைப்படங்கள் திரையரங்குகளில் வெளியாகி மூன்று ஆண்டுகள் ஆகிவிட்டது. இந்த படத்திற்காக திருச்சி, மதுரை, கோயம்புத்தூர் என ஒவ்வொரு இடத்திற்கு செல்லும்போதெல்லாம் ரசிகர்களின் வரவேற்பும், அவர்கள் காட்டும் அன்பும் பிரமிக்க வைத்தது. அவர்கள் என் மீது காட்டும் அன்பை அளவிட முடியாது. தூத்துக்குடி, திருநெல்வேலி ஆகிய இடங்களுக்கும் சென்று ரசிகர்களை சந்திக்கலாம் என்ற திட்டமும் இருக்கிறது.

'கோப்ரா' படத்திற்கு படக்குழுவினர் கடுமையாக உழைத்திருக்கிறார்கள். ஆகஸ்ட் 31ஆம் தேதி அன்று திரையரங்குகளில் வெளியாகிறது. ஆதரவு தாருங்கள்.'' என்றார்.

Previous article
Next article

Related Articles

Stay Connected

22,043FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles

CLOSE
CLOSE