7.3 C
New York
Friday, April 19, 2024

Buy now

காலையில் சந்திப்பு மாலையில் திருமணம்! எந்த சினிமாவும் காணாதது நடிகை துளசியின் கதை

ஒரு காலத்தில் கதாநாயகியாக வலம் வந்தவர்கள் இப்போது அம்மா அண்ணி
வேடங்களில் தோன்றி வருவது சகஜம்.

இப்போது பல படங்களில் அழகிய அம்மாவாக வலம் வருபவர் நடிகை துளசி. ‘சகலகலா
வல்லவனி’ல் கமலின் தங்கையாகவும் ‘நல்லவனுக்கு நல்லவனி’ல் ரஜினியின்
மகளாகவும் நடித்தவர் இவர்தான்.

இதுவரை தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி என்று சுமார் 300 படங்களில்
நடித்திருக்கும் துளசி, மூன்று மாதக் குழந்தையாக இருந்த போதே திரையில்
முகம் காட்டியவர்.

35 ஆண்டுகளுக்குப்பின் வெளிவரவுள்ள ‘சங்கராபரணம்’ தமிழ்ப்பட அறிமுக
விழாவுக்கு சென்னை வந்தவரை சந்தித்த போது

உங்கள் முதல் திரைப் பிரவேசம்..?

நான் முதலில் நடித்த படம் ‘பாகரி’ அப்போது எனக்கு ஒரு வயது கூட ஆகவில்லை.
மூன்றுமாத குழந்தை நான். சாவித்ரியம்மா என் அம்மாவுக்குத் தெரியும். தான்
நடிக்கும் படத்தில் ஒரு குழந்தை தேவைப்பட்டதை சொல்லி குழந்தையைக்
கேட்டுள்ளார். கதையில் அது ஆண் குழந்தை. என் மகள் பெண் குழந்தையாயிற்றே
என்றிருக்கிறார் என்அம்மா. அதனால் என்ன பரவாயில்லை. ஜட்டி போட்டு ஆண்
குழந்தையாக்கி விடுவோம் என்று வாங்கிப் கொண்டாராம். அப்படி நான் நடித்த
படம் தான் ‘பாகரி’ .. இதெல்லாம் என் அம்மா சொல்லித்தான் எனக்கே தெரியும்.
ஒன்றரை வயதில் அடுத்தபடம் .பாடல் காட்சியில் தோன்றினேனாம். பிறகு மூன்று
வயதில் ஒரு படம். இப்படிப்பட்ட சூழலில் சற்று வளர்ந்த பிறகு தமிழ்
தெலுங்கு, மலையாளம், இந்தி என்று பிஸியான குழந்தை நட்சத்திரம்
ஆகிவிட்டேன்.

எத்தனை படங்களில் நடித்தீர்கள்?

நான் நடித்தவை 316 படங்கள் என்றால் சுமார் 100 படங்களில் குழந்தை
நட்சத்திரம்தான். பிஸியாக இருந்தேன். எந்த அளவுக்கு என்றால் ஸ்கூல்கூட
போக முடியாத அளவுக்கு. பிஸியாக இருந்தேன். நிஜம்தான், நான் பள்ளிக்கூடமே
போகவில்லை.

பின்னர் எப்படி படிக்கக் கற்றுக் கொண்டீர்கள்?

என் சகோதரிகளும் அண்ணாவும் கற்றுக் கொடுத்ததுதான் எல்லாம். அவர்கள்
எல்லாரும் ஸ்கூல் போய் வருவார்கள். நான் படப்பிடிப்பு போய் வருவேன்.
அன்று காலை முதல் ஸ்கூலில் படித்ததை மாலையில் எனக்கு சொல்லித்
தருவார்கள். இப்படியே தமிழ், தெலுங்கு, இங்கிலீஷ் எல்லாம் எழுதக் கற்றுக்
கொண்டேன்.

குழந்தையாக கதாநாயகியாக.. எத்தனை மொழிகளில்?
தமிழ்,தெலுங்கு,மலையாளம் என எல்லா மொழிகளிலும் குழந்தையாக
நடித்திருக்கிறேன். தமிழில் மட்டும் குழந்தையாக சுமார் 40 படங்களில்
நடித்து இருப்பேன்.கன்னடத்தில் மட்டும்தான் குழந்தையாக நடிக்கவில்லை.
எல்லா மொழிகளிலும் கதாநாயகியாகவும் நடித்திருக்கிறேன்.

எப்போது அம்மாவாக நடிக்க ஆரம்பித்தீர்கள்?

எனக்குத் திருமணமாகி ஆண் குழந்தை பிறந்து அவன் சற்று வளரும் வரை நடிப்பதை
நிறுத்தியிருந்தேன். அதன் பிறகு அம்மா வேடங்களில் நடிக்க தொடங்கினேன்.
நல்ல பெயரும் கிடைத்தது. தமிழில் நான் முதலில் அம்மாவாக நடித்த படம்
‘பிள்ளையார் தெரு கடைசி வீடு’ அதன்பிறகு’ஈசன்’ , ‘மங்காத்தா’ ஆதலால்
காதல் செய்வீர்’ ‘சுந்தரபாண்டியன்’ ‘பாண்டியநாடு’ போன்ற படங்களில்
நடித்தேன்.

குறிப்பாக ‘பண்ணையாரும் பத்மினியும்’ படத்தில் நான் நடித்தது மறக்க
முடியாதது. அதில் நான் ஏற்ற செல்லம்மா கேரக்டர் பலராலும் பாராட்டப்
பட்டது. எங்களுக்கு பாட்டெல்லாம் உண்டு.இப்போதெல்லாம் அப்பா அம்மா
கேரக்டரை யாரும் பெரிதாக காட்டுவது இல்லை. அதில் நான் படம்முழுக்க
வருவேன். ரசிக்கும்படி பார்ப்பவர் நெகிழும்படி அன்பையே பொழியும் கேரக்டர்
அது.

இப்போது நடித்துவரும் படங்கள்?

தியாகராஜன் இயக்கும் ‘சாகசம்’ படத்தில் எனக்கு நல்ல வேடம். ‘ஜீரோ’ வும்
நல்லவாய்ப்புதான். ஒரு ஃப்ளாட்டில் நடக்கும் கதை. சுந்தர்.சி இயக்கத்தில்
விஷாலின் அம்மாவாக ‘ஆம்பள’ படத்தில் நடிக்கிறேன். மகேஷ்பாபு நடிக்கும்
தெலுங்குப் படத்தில் ஸ்ருதி ஹாசனின் அம்மாவாக நடிக்கிறேன். ஸ்ருதிஹாசன்
திறமையான நடிகை என்பதை நேரில் பார்த்து தெரிந்து கொண்டேன்.

கமல் ரஜினியுடன் நடித்த அனுபவங்கள்?

‘சகலகலா வல்லவன்’ படத்தில் நடித்த போது நான் சிறு பெண். கமல் சாரின்
தங்கையாக வருவேன். படத்தில் முக்கிய கேரக்டர். அதற்கு முன் குழந்தையாக பல
படங்களில் நடித்து இருந்தாலும் அவருடன் நடிக்கும் போது தயக்கம் பயம்
இருந்தது. அவர் என் நடை உடை பாவனை எல்லாம் எப்படி இருக்க வேண்டும் என்று
சொல்லிக் கொடுத்தார். பெரிதும் ஊக்கம் தந்தார். உதவியாக இருந்தது. அதேபோல
‘நல்லவனுக்கு நல்லவனில்’ ரஜினிசாருடன் நடிக்கும் போது பயந்தேன். முதல்
நாள் ஏவிஎம் ஸ்டுடியோவில் நடந்த அந்தப் படப்பிடிப்பை மறக்க முடியாது.அவர்
குட்டி என அழைத்து சகஜமாக்கிக் கொண்டு பழகினார். சௌகரியமாக்கி என்
தயக்கத்தைப் போக்கினார். அது மறக்க முடியாதது

குடும்பம் பற்றி..?

நான் ஷீரடி சாய்பாபா பக்தை. என் கணவர் பெயர் ஷிவமணி. கன்னடத்தில் பிரபல
இயக்குநர். இதுவரை 26 படங்கள் இயக்கியுள்ளார்.

எங்கள் திருமணம் மறக்க முடியாதது. அவர் அப்போது சாதாரண நிலையில்
இருந்தவர்தான். தேவராஜை வைத்து ‘மதர் இந்தியா’ இயக்கினார். நிரோஷாதான்
நாயகி. கதாநாயகனுக்கு சிறுவயது அம்மாவாக நான் நடித்தேன்.

காலை 8 மணிக்கு படப்பிடிப்புக்குப் போனேன். 11 மணிக்கு ஷிவமணி ‘நாம
திருமணம் செய்துக்கலாமா?’ என்றார். எங்களுக்குள் காதல் என்றெல்லாம்
இல்லை.திருமணம் செய்துக்கலாம் பிறகு காதலிக்கலாம் என்றார். அவர் அவசரப்
படுகிறவரோ உணர்ச்சிவசப் படுகிறவரோ இல்லை. அவரைப்பற்றி எல்லா உண்மையும்
பகிர்பவர். தன் அம்மா வீட்டு வேலை செய்பவர் என்பதைக் கூட மறைக்காமல்
சொல்பவர். அவர் தன் விருப்பத்தைச் சொன்ன போது திரையுலகில் வளர வேண்டிய
அளவுக்கு ஆரம்பநிலையில்தான் இருந்தார். வசதிகள் இல்லை. இருந்தாலும் அவர்
சொன்னதை மறுக்க முடியவில்லை. மாலை கோயிலுக்கு கூப்பிட்டார். அது
மல்லேஸ்வரம் பாபாகோவில்.அங்கேயே தாலி கட்டினார்.இப்படி 1994 அக்டோபர்
28ல் எங்கள் திருமணம் நடந்தது. இது ஒரு மாதம் கழித்துதான் வீட்டுக்கே
தெரியும். அவர் எல்லாரும் நல்லா இருக்க எண்ணுபவர். அவரும் பாபா பக்தர்.
அதனால் என்னால் மறுக்க முடியவில்லை. என் வீட்டுக்குத் தெரிந்த போது
எல்லாரும் சந்தோஷப் பட்டனர். எல்லாம் பாபா செயல். இந்தக் கதையை இப்போது
சொன்னால் யாரும் நம்பமாட்டார்கள். திருமணம் குடும்பம் என்பது ஒரு நாளில்
முடிவு செய்கிற விஷயமா என்பார்கள். ஆனால் என் மனம் அன்று எடுத்த முடிவு
இன்றும் சரியாகவே படுகிறது. என மகன் சாய்தருண் பிபிஏ முதலாம் ஆண்டு
படிக்கிறான். எனக்கு எந்த குறையும் இல்லை. திருமணத்துக்குப் பிறகு 20
ஆண்டுகளாக காதலித்து வருகிறோம். எந்த சினிமாவிலும் வராதது எங்கள் கதை.

இப்போதைய படங்கள் பற்றி.?

இப்போது நிறைய படங்கள் வருகின்றன. மனதைக் கவர்பவை ஒரு சில படம்தான்.
ரசிகர்கள் அறிவாளிகள். தரமில்லாததை தவிர்த்து நிராகரித்து விடுவார்கள்.

35 ஆண்டுகளுக்குப்பின் தமிழ்ப்படமாக வெளிவரவுள்ள ‘சங்கராபரணம்’ பற்றி?

‘சங்கராபரணம்’ படத்தில் நடித்தபோது எனக்கு 10 வயது இருக்கும். அதில்
நான் ஒரு பையனாக வருவேன் க்ளைமாக்ஸ் வரும் வரை வருகிற முக்கிய கேரக்டர்
அது. மீண்டும் தமிழில் மொழிமாற்றம் செய்து வெளிவருவது பற்றி மகிழ்ச்சி.
உங்களைப் போல படத்தைப் பார்க்க நானும் ஆவலோடு காத்திருக்கிறேன் .

Related Articles

Stay Connected

22,043FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles

CLOSE
CLOSE