வடசென்னையை மையப்படுத்தி வந்திருக்கும் அடுத்த படம் இது. கேங்ஸ்டர் கதைதான். ஆனால் கொஞ்சம் நகைச்சுவையாக கொடுத்திருக்கிறார்கள்.
த்தத்தைக் கண்டாலே வலிப்பு வரும் அளவுக்கு போபியோ நோய் உள்ளவர் ஹீரோ ஜி.வி.பிரகாஷ். இவரது அப்பா, தாத்தா இருவருமே அந்தக் காலத்து ரவுடிகள். ஆனால் இவருக்கு மட்டும் ரவுடியிஸம் செட்டாகவில்லை. அதே ராயபுரத்தை ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கும் தாதா ‘நைனா’ என்னும் சித்தப்பு சரவணன். மீனவர் சங்கத் தலைவர், துறைமுகத்தின் அதிகாரிகள், தொகுதி எம்.எல்.ஏ. என்று பலரையும் கைக்குள் வைத்திருக்கும் இந்த நைனாவுக்கு ராயுபரத்திலேயே ஒரு எதிரி உருவாகிறான்.
பெண்களைக் கடத்தி வெளிநாடுகளுக்கு கப்பலில் அனுப்பி வைத்தால் நிறைய பணம் சம்பாதிக்க வாய்ப்பிருப்பதாகச் சொல்கிறான். சரவணன் அதைத் தடுத்து “வேற வேலைய பார்” என்று சொல்லியனுப்ப.. கோபத்தில் அவன் தனது ஆட்களை அனுப்பி சரவணனை கொலை செய்ய முயல்கிறான்.
நெஞ்சில் விழுந்த வெட்டுக்குத்துடன் உயிர் தப்பிய சரவணன் இப்போதுதான் தனது வாழ்க்கையை கொஞ்சம் ரீவைண்ட் செய்து பார்க்கிறார். தனக்கிருக்கும் ஒரே மகள், மனைவி, குடும்பத்தினர் தனக்குப் பின்பு என்ன ஆவார்களோ என்று பயப்படுகிறார். தனக்குப் பின்பு இந்த ராயபுரத்திற்கு யார் நைனாவாக அமர்வது என்று யோசிக்கிறார். இதற்கெல்லாம் ஒரே தீர்வாக தனது மகள் ஆனந்திக்கு எதற்கும் அஞ்சாத ஒரு ரவுடியை கல்யாணம் செய்துவைத்துவிட்டு அவனையே ராயபுரத்திற்கு நைனாவாக்கிவிடலாம் என்று நினைக்கிறார். இதற்காக அந்தப் பகுதி முழுவதிலும் எதற்கும் அஞ்சா சிங்கத்தைத் தேடி நாயாய், பேயாய் அலைகிறார்கள் அடியாட்கள்.
இதற்கு முன்பாகவே ஆனந்தியை பார்த்துவிடும் ஜி.வி.பிரகாஷ் அவர் மீது காதல் கொண்டு அலைகிறார். ஆனந்தி தங்கியிருக்கும் ஹாஸ்டலுக்குள் போய் அவளை பார்க்க முயல்கிறார். அதே நேரம் அதே ஹாஸ்டலில் இருக்கும் ஒரு பெண்ணைத் தூக்க கடத்தல்காரர்களும் நுழைகிறார்கள். அதே நேரம் அதே இடத்திற்கு சரவணனை வெட்டியவனும் வர… அவனைத் தூக்க சரவணனும் ஆட்களை அனுப்புகிறார்.
மின் சப்ளையை துண்டித்தவுடன் கிடைத்த கேப்பில் யாரோ சரவணனின் எதிரியை போட்டுத் தள்ள.. இந்தப் படுகொலையை ஜி.வி.பிரகாஷ்தான் செய்திருக்கிறார் என்று நினைக்கிறார்கள் சரவணனின் அடியாட்கள். இதனால் ஜி.வி.பிரகாஷ் மிகப் பெரிய ரவுடி என்று நினைத்து சரவணனிடம் அவரைப் பற்றி மாற்றிச் சொல்ல.. சரவணன் பிரகாஷை வரவழைத்துப் பேசுகிறார்.
தனது காதலியின் அப்பாவே முன் வந்து பேசுகிறார் என்பதால் ஜி.வி.பிரகாஷும் இதற்கு ஒப்புக் கொள்ள.. கல்யாணத்தில் முடிகிறது. இந்த நேரத்தில் ஜி.வி.பிரகாஷின் ரத்த போபியோ ஆனந்திக்கும், சரவணனுக்கும் தெரிய வருகிறது. சரவணனை மீண்டும் ஒரு முறை கொலை செய்ய முயற்சிகள் நடக்கிறது. ராயபுரத்தில் இருந்தே சரவணனை குடும்பத்துடன் துரத்த அடியாட்கள் கொலை வெறியுடன் அலைய.. இந்தப் பிரச்சினையில் இருந்து ஜி.வி.பிரகாஷும், அவரது குடும்பமும் எப்படி தப்பிக்கிறார்கள் என்பதுதான் திரைக்கதை.
கேங்ஸ்டர் கதை என்றாலும் அதற்குண்டான திரைக்கதையில், இடையிடையே நகைச்சுவைத் துணுக்குகளையும் சேர்த்து அவ்வப்போது சிரிக்க வைத்திருக்கிறார் இயக்குநர். ஜி.வி.பிரகாஷின் உடல்வாகு, அவரது நடிப்புத் திறன் இதற்கேற்றாற்போல் பெரிய மாஸ் ஹீரோவாக அவரை ஆக்காமல் காமெடி ஹீரோவாகவே உருவாக்கியிருக்கிறார் இயக்குநர். சரவணனும், யோகி பாபு, கருணாஸ், வில்லனாக நடித்த லாரன்ஸ் ஆகியோர் நடித்தவைதான். உண்மையாகவே இவர்கள் சம்பந்தப்பட்ட காட்சிகளில் நகைச்சுவையையும் தாண்டி கேங்ஸ்டர் கதையாகவே படம் சீரியஸாகவே நகர்கிறது. இவர்கள் இல்லாத காட்சிகளில்தான் நகைச்சுவையாகத் தெரிகிறது.
கடைசி கட்டத்தில் வரும் மொட்டை ராஜேந்திரன், மன்சூர் அலிகான், பொன்னம்பலம் என்ற மூவர் கூட்டணியின் அலம்பல்களும், சுவையான திரைக்கதையும் படத்தை நல்லவிதமாக முடிக்க வைத்திருக்கிறது. ஒட்டு மொத்தமாகப் பார்க்கப் போனால் தியேட்டரில் 2 மணி நேர எண்ட்டெர்டெயின்மெண்ட்டுக்கு இந்தப் படம் உத்தரவாதம் என்பது மட்டும் உண்மை.