ஈழத்தில் இன்றுவரை நிகழும் மனிதாபிமான மீறலை கண்முன் காட்டும் ஆறாம் நிலம்.
ஐபிசி தமிழ் நடத்திய குறுந்திரை போட்டியில் வெற்றிபெற்ற இயக்குனர் ஆனந்த ரமணன் இயக்கியுள்ள படம் ஆறாம் நிலம். 2009ம் ஆண்டு சிங்கள ராணுவத்திற்கும் விடுதலை புலிகளுக்கும் இடையே நடந்த இறுதிப் போரின் போது ஏராளமானோர் கொல்லப்பட்டனர். இரண்டு தரப்பினருக்கும் உயிர்ச்சேதம் ஏற்பட்டது.
உயிர்பிழைத்தோர் ஏராளமானோர் அந்நாட்டு அரசிடம் சரணடைந்தனர். ஆனால் சரணடைந்தவர்கள் பல பேர் இன்றுவரை என்ன ஆனார்கள் என்றும் எப்படி இருக்கிறார்கள் என்றும் யாருக்குமே தெரியாத மர்மமாக உள்ளது. இவர்கள் எல்லாம் காணாமல் போனவர்கள் அல்ல அரசால் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்கள்.
அவர்களது குடும்பத்திற்குமே இதுகுறித்து தெரியாது. இதனை மையப்படுத்தி இப்படம் எடுக்கப்பட்டுள்ளது. அங்கிருக்கும் ஏராளமான வீடுகளில் குடும்பத்தலைவன் இல்லை. இன்னும் சிலரோ தனது கை கால்களை இழந்து வாழ்ந்து வருகின்றனர். நம்மூர் நூறு நாள் வேலையை போல கண்ணிவெடி அகற்றும் பணிகளை அங்குள்ளோர் தினந்தோறும் செய்து வருகின்றனர். இப்படி.ஒரு நிலையில் காணாமல் போன கணவரை கண்டுபிடிக்க அரசிடம் வலியுறுத்தி வரும் ஒரு மனைவியின் பார்வையில் இப்படம் எடுக்கப்பட்டுள்ளது.
அங்குள்ள வீடுகள், மனிதர்கள், சிதிலமடைந்த இடங்கள் என அனைத்தும் அற்புதமாக காட்சிபடுத்தப்பட்டுள்ளது. ஒவ்வொரு முறையும் அரசு இவர்களை ஏமாற்றுவது தொடர் ஆர்ப்பாட்டங்கள் என இவர்களின் வலிகளை பேசியுள்ளது.
அனைவரது பாராட்டுகளையும் பெற்ற இப்படம் ஐபிசி யூடியூப்பில் இன்று மாலை வெளியிடப்படுகிறது.
